அரசை விட்டு எவரும் வெளியேறலாம் - நிதியமைச்சர் பஸில் அதிரடி அறிவிப்பு
அரசை விட்டு எவரும் வெளியேறலாம். அதேபோல் வெளியில் இருந்து எவரும் அரசுடன் இணையலாம், அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த போது இவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் வைரஸ் தொற்றால் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை உடனே நிமிர்த்த முடியாது. கடந்த அரசும் எமது அரசிடம் ஆட்சியைக் கையளிக்கும்போது நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியில் இருந்ததை எவரும் மறந்திடலாகாது என்று கூறியிருந்தார்.
அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்தும் நடவடிக்கையில் நிதி அமைச்சு ஈடுபட்டுள்ளது. அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்கள் உத்தமர்கள் அல்லர். அதேவேளை, அரசை விமர்சிக்கும் எதிரணியினரின் வாய்ச்சவடால்கள் குறித்து பொதுமக்கள் நன்கறிவார்கள் என தெரிவித்தார். (Vavuniyan)
No comments