பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் விடுதலை
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
புளியங்கண்டலடி - வாகரையை பிரதேசத்தை சேர்ந்த கு.விஜயதாஸ வயது (30) என்ற குடும்பஸ்தரே நேற்று (27) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் நீதிபதி எச்.எம்.எம்.பசில் முன்னிலையில் இவ்வழக்கு நேற்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த நபர் முகப்புத்தகத்தில் அரசினால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் உருவம் அடங்கிய புகைப்படத்தினை பதிவிட்டதன் பிரகாரம் இவர் 27.11.2020 ஆம் திகதி வாகரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
ஒரு பிள்ளையின் தந்தையான இவர் கடந்த ஒரு வருடமும் 2 மாதங்களாக தடுப்புக்காலில் வைக்கப்பட்டிருந்தார். இவர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வாகரை பொலிஸ் நிலையத்திற்கு சென்று காலை 9 மணிமுதல் 12 மணிக்குள் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சட்டத்தரணிகளான எம்.எச்.எம்.றம்சீன் இஹாலிப் றிபான் அகியோர்கள் தொடர்ந்து இவ்வழக்கினை முன்னெடுத்து வந்த நிலையில் சட்டத்தரணி ரி.ஜெயசிங்கம் இவர்களுடன் இணைந்து கொண்டு வழக்கினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)
No comments