சவப்பெட்டிக்குள் நாடு!! ஆணி அடித்து அடக்கம் செய்வதே இறுதிவேலை!! வினோ எம்பி!!
இந்தநாடு அதன் ஆட்சியாளர்களாலும், தலைவர்களாலும்
சவப்பெட்டிக்குள்ளே வைத்து அடைக்கப்பட்டுள்ளது. அல்லது அடக்கம் செய்யும் நிலைக்கு வந்துள்ளது. சவப்பெட்டிக்குள்ளே இருக்கும் இலங்கை என்ற நாட்டிற்கு ஆணி அடிப்பது மாத்திரமே இறுதி வேலையாக உள்ளது. என்று பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடி தொடர்பாக வவுனியாவில் இன்று ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.....
சர்வதேச உதவிகளோ அல்லது புதிய அரசாங்கத்தின் மூலமோ இந்த நாட்டின் அழிவை தடுக்க முடியாது. அதற்கு பிரதான காரணம் இந்த நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும், ஒட்டுமொத்தமாக இந்த நாடு அழிந்துபோவதை யாராலும் தடுக்க முடியாத ஒரு நிலமை ஏற்ப்பட்டுள்ளது. தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று தந்தை செல்வா கூறினார். ஆனால் இந்த நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அத்தியவசிய தேவை என்ற ரீதியில் ஒரு வரிசை, ரோக்கனை பெற்றுக்கொள்ள ஒரு வரிசை, என வரிசைகளின் எண்ணிகையோ நீண்டு செல்கின்றது. ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ அதுபற்றி தெரியாது. இந்த வரிசைகளினால் பொது மக்கள் படும் துன்ப, துயரங்கள். அவர்களுக்கு தெரியாது. அவர்களும் இந்த வரிசைகளில் நின்றாலே மக்களின் துயரங்களைஉணர்ந்துகொள்வார்கள் என்றார்.
No comments