Breaking News

10வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று



10வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. 

இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றுக்கு முதல்முறையாகத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களை இன்று முற்பகல் 9 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகைதருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்றத்திற்கு வருகைதரும் உறுப்பினர்களின் வாகனங்கள் காவல்துறையினரால் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்துமிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உறுப்பினர்களுக்கான கூட்டத்துக்குச் சென்று, அழைப்பு மணியோசை எழுப்பப்படும் வரையில் அங்கு தங்கியிருத்தல் வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களது கணவன் அல்லது மனைவியுடன் வருகின்ற உறுப்பினர்கள், அலுவலர்களுக்கான நுழைவாயில் அருகில் இறங்க வேண்டும் எனவும் ஏனைய உறுப்பினர்கள், உறுப்பினர்களின் நுழைவாயிலின் அருகில் இறங்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments