வவுனியா அரச உத்தியோகத்தர்களின் சொத்து விபரங்களை ஆராயுங்கள் - சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பு
வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அரச உயர் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆராயப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பலர் திடீர் செல்வந்தர்களாக மாறியிருப்பதுடன் பினாமிகளின் பெயர்களில் சொத்துக்கள் குவித்துள்ளனரா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் உருவாகி வருகின்றது.
அத்துடன் பிரதேச செயலகங்களில் மக்கள் தமது காணி தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதுடன் காலம் கடத்தி மக்களை அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பதுடன் புலம் பெயர் நாடுகளில் இருந்து வருபவர்கள் மிகவும் இலகுவில் ஓரிரு நாளில் தமது காணி விடயங்களை சீராக்க கூடியதாக உள்ளதையும் பொது மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.
இவ்வாறான சூழலில் தற்போதைய அரசாங்கம் ஊழலை ஒழிப்பதாக கூறி வரும் நிலையில் வவுனியாவில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பணிக்கு இணையும் போது வழங்கிய சொத்து விபரங்களையும் தற்போது அவர்களின் சொத்துக்களையும் ஆராய வேண்டும் என்பதுடன் அவர்கள் வேறு நபர்களின் பெயர்களில் சேர்த்துள்ள சொத்துக்களையும் புலனாய்வு செய்து வெளிப்படுத்துவதனூடாகவே வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களின் பொதுமக்களிடம் இலஞ்சம் பெறல் மற்றும் மக்களை அலைக்கழிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
No comments