Breaking News

15 வருடமாக இராணுவத்தின் வசமுள்ள வவுனியா கூட்டுறவு பயிற்சி நிலையத்தை விடுவிக்க இராணுவம் இணக்கம்: திலகநாதன் எம்.பி

15 வருடமாக இராணுவத்தின் வசமுள்ள வவுனியா கூட்டுறவு பயிற்சி நிலையத்தை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்துள்ளார்

பாராளுமன்றத்தில் கிளீன் சிறிலங்கா விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் காணப்படும் கூட்டுறவு பயிற்சி நிலையமானது கடந்த 15 வருடமாக இராணுவத்தின் பயன்பாட்டில் காணப்பட்டு வந்தது. கடந்த மாதம் இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்கள் விடுவிப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.  

வடக்கு மாகண சபை ஆட்சியின் போது வவுனியாவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் இதுவரை காலமும் திறக்கப்படாது பூட்டிய நிலையில் காணப்படுகின்றது. எதிர்வரும் காலத்தில் அதாவது வரும் மாதத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அதனை திறந்து மக்களது பயன்பாட்டிற்கு விடவுள்ளோம்.

வன்னிப் பிரதேசத்தில் மகாவலி கங்கை நீர் இதுவரை வழங்கப்படவில்லை. எமது ஆட்சியில் மகாவலி கங்கை நீர்வளமானது வன்னிக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் வளமான எதிர்காலத்தையும், வளமான வாழ்க்கையையும் வன்னி மக்களுக்கு பெற்றுக் கொடுப்போம் எனத் தெரிவித்தார். 

No comments